17-12-2019 06:48 PM
நகைச்சுவை உணர்வு!
(சென்ற வார தொடர்ச்சி...)
இளையராஜாவுக்கு, நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. ஒரு முறை ராஜாவும் அமரனும் திருச்சிக்குப் பக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
“அமர்! பக்கத்துல குணசீலம்ங்கிற ஊரில் கோapல் இருக்கு. அங்கே பைத்தியம் குணமாகிற பிரசித்தி பெற்றது. நீ அவசியம் போகணும்” என்றார் ராஜா.
“என்ன விசேஷம்>” – கங்கை அமரன் கேட்டார்.
“அங்கே போனா தீராத பைத்தியம்கூடக் குணமாயிடுமாம்” – என்றார் ராஜா.
“எனக்கு நம்பிக்கை இல்லை” – அமரன்.
“ஏன்?” – ராஜா.
“ஏற்கனவே போயிட்டு வந்த உனக்கே இன்னும் குணமாகலையே?” – சிரிக்காமல் சொன்னார் அமரன். அதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்தார் ராஜா.
* அவருக்கு இசையில் அதிக நாட்டம் உண்டு. சரி அந்த டைரக்டருக்கு யாருடைய பாடல்கள் பிடிக்கும்?
“பொதுவாக எல்லா இசையும் பிடிக்கும் என்றாலும், என் இளையராஜாவின் இசை பிடிப்பதுபோல் வேறு எந்த இசையும், எந்த நிலையிலும் என் இதயம் கவர்ந்ததில்லை” என்று உணர்ச்சி பொங்க பேசும் அவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாதான். இத்தனை பாசம் கொண்ட இவருக்கும் ராஜாவுக்கும் இடையில் ஏன் இடைவெளி? வறுமையில் வாடும்போது இருந்த நெருக்கமான நட்பு வசதியும் புகழும் வந்த பிறகு இயல்பாக இணைய முடியவில்லை. அது ஏன்? – வேதனை கலந்த புதிர்!
* ஒரு சமயம் சிவா விஷ்ணு கோயிலில் உட்கார்ந்து கஷ்ட காலம் எப்போ முடியும் என மனசுல நினைச்சுக்கிட்டே ஒரு பெருமூச்சு விட்டேன். அருகில் ஒரு பெரியவர் அந்த பெருமூச்சிலிருந்தே என் நிலைமையை புரிந்து கொண்டவராக என் பக்கம் திரும்பி அமர்ந்தார்.
“தம்பி! நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தைரியத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது தைரியத்தை மட்டும் நாம் கைக்கொண்டுவிட்டால் எல்லாமே கைகூடிவிடும்” என்று கூறினார்.
தைரியலட்சுமியைக் கைவிடாதிருந்ததால் எப்படி ஒரு இளவரசன் தோல்வி நிலையிலிருந்து வெற்றி வீரனாக மாறினான் என்ற கதையையும் சொன்னார்.
அதைக் கேட்டு புது நம்பிக்கையுடன் அறைக்குத் திரும்புகிறேன். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா ஆகியோர் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். கையில் காசு இல்லாமல் எப்படி இந்த பாஸ்கர் உற்சாகமாக இருக்கிறான் என நினைப்பதுபோல் தெரிந்தது. அப்போது வெளியிலிருந்து ஒரு குரல் வருகிறது.
“இங்கே ஹார்மோனியம், தபேலா, கிடார் வாசிக்கிற பையன்கள் இருக்கிறாங்களாமே? அவங்க ரூம் எது?” என்று வாட்ச்மேனிடம் யாரோ விசாரிக்கிறார்கள்!
வாடியிருந்த எங்கள் முகத்தில் சந்தோஷ மலர்ச்சி ஏற்பட்டது. இன்றைய உணவுக்கு இறைவன் வழிசெய்து விட்டான் என நினைத்துக்கொண்டோம். அமரன் வெளியே போய் விசாரித்த மனிதரை அறைக்கு அழைத்து வந்தான். அவர்தான் முதன்முதலில் சென்னையில் இசை நிகழ்ச்சியில் எங்களுக்கும் எங்கள் இசைக்கும் இரையளித்தவர். அவர் பெயர் நீலகண்டன்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மாமனார் பாடகி ஷோபா சந்திரசேகரின் தந்தை. நடிகர் விஜயின் தாத்தாதான் அவர். அவர்தான் சென்னையில் எங்களை அரங்கேற்றினார். அவர் இப்போது இல்லை. கஷ்ட காலத்தில் அவர் அளித்த வாய்ப்பு மறக்க முடியாதது.
அன்று சிவா விஷ்ணு கோயிலின் பின்புறம் உட்கார்ந்து எனக்குத் தைரியம் கொடுத்த அந்தப் பெரியவரை நாங்கள் வெற்றி பெற்ற நேரங்களில் நினைத்துக் கொள்வேன். அவரை பலமுறை தேடியிருக்கிறேன். என் கண்ணில் படவில்லை. ‘தெய்வம் நல்லவர் ரூபத்தில் வந்து நல்லது சொல்லுமோ…’ என்கிறார் ராஜாவின் அண்ணன் பாஸ்கர்.